வெளிநாடு செல்பவர் கவனத்திற்கு
மது சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம்(?) என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது "பாஸ்போர்ட்" எடுப்பதற்கே !
"பாஸ்போர்ட்" எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக் கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.
பணத்தை பெற்றுக்கொள்ளும் இவர்கள், போலியாக ஆவணங்களைத் தயார் செய்து விசாக்களைப் பெறுகிறார்கள். அதுவும் டூரிஸ்ட் விசா, செங்கன் விசா (Schengen) (இக்கட்டுரையின் கீழே செங்கன் விசாவைப் பற்றி விளக்கியுள்ளேன்.)
இவ்விசாவைக் கொண்டு பயணமாகி அங்கே வசிக்கும் தங்களால்...
1. சுதந்திரமாக பணி செய்ய முடிகிறதா ?
2. குடும்பத்தை பிரிந்து வருட கணக்கில் நிம்மதியாக இருக்க முடிகிறதா ?
3.ஹலாலான பணிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்கிறிர்களா ?
4. விசாவுக்காக பெற்ற கடன்களை அடைத்து விட்டீர்களா ?
5. நன்கு கல்வி கற்கவில்லையே, பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டேனே என வருந்துகிறீர்களா ?
6. ஒரு முறை சென்றுவிட்ட தங்களால் திரும்ப அதே நாட்டிற்கு செல்ல முடியுமா ?
சகோதரர்களே சிந்தியுங்கள் !
வளைகுடா , கிழக்காசிய போன்ற நாடுகளுக்குச் செல்வோரும் போதிய அனுபவம் இன்மையால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும் தரகர்கள் சொல்லி அனுப்பிய வேலை ஓன்று ஆனால் அங்கே தரக்கூடிய வேலைகளோ வேறொன்று !
இத்தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னதான் தீர்வு ?
1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.
2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.
3. மேலும் நமது அரசு வழங்குகின்ற “ சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.
4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.
5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.
6. இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் தங்களின் ஆங்கில மொழி பேசும் திறமை மற்றும் வேலை அனுபவங்களையும் நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
7. விசாக்கள் பெறுவது எப்படி ? என்று அந்தந்த நாட்டின் ஒவ்வொரு வலைத்தளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை பின்பற்றலாம். இதனால் செலவுத் தொகைகள் மிச்சமாகும்.
8. மேலும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் நல்ல ஆலோசனைகளையும் கேட்டு தெளிவு பெறலாம்.
9. நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.
10.செலவிற்குத் தேவையான பணம் அமெரிக்க டாலர்களில் ( Traveller Cheque or CASH ) வைத்திருப்பது நல்லது.
11.ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்து, தொடர்பு கொள்ள இலகுவாக ரோமிங் வசதிகளுடன் கூடிய அலைபேசியை வைத்துக்கொள்வது நல்லது.
12.இமிக்ரேஷன் கவுன்டரில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு மன தைரியத்துடன் தெளிவாக, சுருக்கமாக, நாகரிகமான முறையில் பதில் அளியுங்கள். பயப்பட வேண்டாம் அவர்களும் நம்மைப்போல மனிதர்களே !
“செங்கன் விசா “ (Schengen) என்றால் என்ன ?
ஐரோப்பியா யூனியன் நாடுகள் தங்களின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டதே “ செங்கன் விசா “ இச்சுற்றுலா விசாவில் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளலாம்.
இவ்விசாக்களை எவ்வாறு பெறுவது ?
இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள துணை தூதரகங்களில் அதற்குரிய விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி கீழ்க்கண்ட “ டாக்குமெண்ட்ஸ் ” களை இணைத்து தாக்கல் செய்யலாம்.
தேவையான “ டாக்குமெண்ட்ஸ் ” கள் :-
1.“செங்கன் விசா" விண்ணப்ப படிவத்தில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் பூர்த்தி செய்து இருக்க வேண்டும்
2. நமது பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க தெளிவான நகல்கள் (செல்லுபடியாகும் கால அளவு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்குமாறு கண்காணிப்பது அவசியம் )
3. இரண்டு நம்முடைய புகைப்படங்கள் (அதில் ஒன்றரை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றொன்றை அதில் இணைத்து (stapled) கொடுக்கவும் )
4. உறுதி செய்யப்பட்ட விமான டிக்கட்டுகளின் நகல்.
5. நாம் தங்கக் கூடிய இடத்தின் ( HOTEL ) உறுதி செய்யப்பட்ட ரசீதுகள்.
6. ட்ராவல் / மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்து இருக்க வேண்டும்.
7. நிறுவனங்களின் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில், கடந்த மூன்று ஆண்டுகாளாக நாம் செலுத்திய வருமான வரிகள் மற்றும் வங்கி கணக்கின் மூன்று மாத காலம் நாம் செய்து கொண்ட வரவு செலவுகளின் விவரங்கள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.
8. நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில், தங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் மூன்று மாத நாம் பெற்ற சம்பள ரசீதுகள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.
குறிப்பு :
1. மற்ற நாடுகளுக்கு ( America, Canada, England, Australia, New Zealand ) பயணம் மேற்கொள்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம்.
2. “செங்கன் விசா" வில் பயணம் மேற்கொள்வோர். அந்நாடுகளில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் சிக்கனமான பயணம் இனிதாக அமைய என் வாழ்த்தும் துவாவும் !
With Love
Badr Zaman
2 Comments